இஸ்ரேல் -ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போரை தொடங்கியது. போரை நிறுத்த வேண்டுமென நாடுகள் கூறியும் இஸ்ரேல் போரை தொடர்ந்து வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.
போர் ஒப்பந்தத்தை தொடர்ந்து லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள் படிப்படியாக வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் காரணமாக தெற்கு லெபனான் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றன. இன்னும் எல்லை பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து மட்டும் இஸ்ரேல் ராணுவம் வெளியேறாமல் உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.