பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்த்து மாற்று நாணயத்தில் ஈடுபட விரும்பினால், 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BRICS நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.
அப்போது,பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வா்த்தக கூட்டாளிகளும் உள்ளூா் நாணயத்தில் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நாணயத்தை உருவாக்குவதோ அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தைக் கொண்டு வருவதோ நடக்காது என பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் தரவேண்டும் என்றும், இல்லையெனில், 100 % வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு வர்த்தகமும் செய்ய முடியாமல் தடை விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.