போக்குவரத்து சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘ஊபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.
ஊபர் நிறுவனம் உலகம் முழுவதும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகன வாடகை வாகன சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்தியாவில் முதன்முறையாக படகு சேவையையும் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரின் தல் ஏரியில் ஊபர் ஷிகாரா என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை ஊபர் நிறுவனம் தொடங்கியுள்ளது. வெனிஸ் நகரில் இதே போன்று படகு போக்குவரத்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையையும் பயணிகள் செயலி வாயிலாக முன்பதிவு செய்ய இயலும். குறைந்தபட்சமாக 12 மணி நேரத்துக்கு முன்பாகவும், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்பாகவும் இந்த சேவையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே இந்த படகு சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணம் முழுவதும் ஓட்டுநர்களுக்கே செல்லும் என்றும், ஊபர்’ நிறுவனத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்து கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.